தமிழக திரையரங்குகளில் 100 சதவிகிதம் ரசிகர்களை அனுமதிப்பதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கரோனா பொதுமுடக்கத் தளர்வுகளின்படி திரையரங்கில் 50 சதவிகித மக்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், அதனை தமிழக அரசு 100 சதவிகிதமாக்கி உத்தரவிட்டது. தயாரிப்பாளா்கள் சங்க கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது.
இந்நிலையில், திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கை அனுமதிக்கு எதிராக முத்துக்குமார், ராம்குமார் ஆதித்தன் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கரோனா காலம் என்பதால் தமிழக அரசின் அறிவிப்பு மத்திய அரசின் பேரிடர் விதிகளுக்கு எதிரானது எனப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் குழுக்களும் 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி தராததால் அரசாணையை ரத்து செய்ய கோரி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.