வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
வன்னியர் சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததாக தவறான கருத்துகளை சில விஷமிகள் சமூகவலைதளங்களில் பரப்பி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. முற்றிலும் உண்மைக்கு புறம்பான இந்த கருத்துகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழகத்தில் வன்னியர் சமூகத்தினருக்கு 20% இட ஒதுக்கீடு கோரி தமிழக அரசிடம் பாமக கோரிக்கை வைத்து வருகிறது. சமீபத்தில் கூட சென்னை உள்ளிட்ட இடங்களில் பாமக சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாவதற்கு ஓபிஎஸ் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.