கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் தலைமை வகித்தார்.
முன்னதாக அனைவருக்கும் கரோனா கால சிறப்பு முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்கும் வகையில் சுகாதார திரவம் மற்றும் முகக்கவசங்கள் பள்ளியின் சார்பில் வழங்கப்பட்டது.
சமூக இடைவெளியை கடைப்பிடித்து அனைவருக்கும் இருக்கைகள் அமைத்துக் கொடுத்து பயிற்சி முகாம் துவக்கப்பட்டது.
முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் மு. இலட்சுமி வரவேற்றார். தொடர்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்கள் தனது தலைமை உரையில் தற்போதைய கரோனா கால பள்ளியின் செயல்பாடுகள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவின் அவசியம் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினார். பின்னர் உதவி ஆசிரியர்கள் சி. ஆனந்த கோபாலகிருஷ்ண மூர்த்தி, இராம்குமார் ஆகியோர் பயிற்சி முகாமுக்கான கருத்துக்களை வழங்கினர். நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கு. ஆனந்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பெ. மகாலட்சுமி உள்ளிட்ட அனைவரும் கலந்துக் கொண்டனர்.
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.