கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில், கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்கள் அறிமுக விழா நடைபெற்றது.
கூத்தாநல்லூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அறிமுக விழாவிற்கு, திருவாரூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். ஆய்வாளர் அனந்தகிருஷ்ணன் வரவேற்றார்.
கொத்தங்குடி மற்றும் ஆய்குடி ஆகிய இரண்டு ஊராட்சி மன்றங்களுக்கு, எஸ்.பார்த்தீபன் மற்றும் பி.கணேஷ் என இரண்டு காவல் அலுவலர்களை அறிமுகம் செய்து வைத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.துரை பேசியது:
திருவாரூர் மாவட்டத்தில் முதன் முதலாக, வெள்ளிக்கிழமை கூத்தாநல்லூர் காவல் நிலையத்திற்குள்பட்ட இரண்டு தாய் கிராமங்களில் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்களை அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
கொத்தங்குடி ஊராட்சிமன்றத்திற்கு உள்பட்ட பாண்டுக்குடி, அக்கரைப் புதுத்தெரு மற்றும் நன்னிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களுக்கு காவலர் எஸ்.பார்த்தீபனும், ஆய்குடி ஊராட்சி மன்றத்திற்குள்பட்ட அகரப் பொதக்குடி , பொதக்குடி , புதுக்குடி உள்ளிட்ட கிராமங்களுக்கு காவலர் பி.கணேஷும் காவல் அலுவலர்களாக இருப்பார்கள்.
அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இவர்களிடம் தங்கள் பிரச்னைகளைத் தெரிவிக்கலாம். காவலர்கள் உங்கள் குறைகளைத் தீர்க்க உங்களைத் தேடி வருவார்கள். கிராமங்களில் எந்தத் தவறுகள் நடந்தாலும் இவர்களிடம் தெரிவிக்கலாம்.
மக்கள் காவலர்களுடன் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் தவறுகள் நடக்காமல் சட்டம், ஒழுங்கு சிறப்புடன் இருக்கும். உங்களுக்காகத்தான் காவலர்களாகிய நாங்கள் இருக்கிறோம் என்றார்.
விழாவில், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆய்குடி மல்லிகா பிச்சையன், கொத்தங்குடி கார்த்திகா ராதாகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் அய்.வி.குமரேசன், இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் எம்.சுதர்ஸன், பொதக்குடி ஊர் உறவின்முறை ஜமாஅத் நிர்வாக சபை அறப்பணிச் சங்கத் தலைவர் எஸ்.ஏ. மஹதூம் மைதீன், செயலாளர் எம்.எம்.ரஃபியுதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.