தமிழகம்-கர்நாடகம் எல்லையில் நிகழ்ந்த சாலை விபத்தில் இரு பண்கள் உள்பட் 3 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த வேன் ஓட்டுநர் உள்பட 13 பேர் சாம்ராஜ் நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் கணக்கம்பாளையத்தை கிராமத்தைச் சேர்ந்த 15 பேர் வேன் ஒன்றில் மைசூருக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை புறப்பட்டனர். திம்பம் மலைப்பாதை வழியாக சென்ற வேன், வெள்ளிக்கிழமை அதிகாலை இரு மாநில எல்லையான செர்ணாவதி அணை அருகே சென்று கொண்டிருந்தது.
மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது சாலை விரிவாக்கப்பணி நடந்து வரும் நிலையில் லேசான சாரல் மழை பெய்தது. அப்போது மூடுகள்ளி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த வேன் மீது எதிரே வந்த சரக்கு வாகனம் லேசாக உரசியதில் வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், சுப்பிரமணியம்(70), மனைவி அமராவதி(65), மற்றும் கோகிலா(42) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தை அறிந்த அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு கர்நாடகம் ஆம்புலன்ஸ் மூலம் சாம்ராஜ்நகர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் வேன் ஓட்டுநர் அருண் உட்பட 13 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து சாம்ராஜ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.