தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தடுப்பூசியை ஒத்திகை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் நேரில் ஆய்வு செய்தார்.
தேனி மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட சுகாதார மைய அலுவலகம், மற்றும் தனியார் மருத்துவமனை உள்பட 5 இடங்களில் கரோனா நோய்த்தொற்று தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் நடைபெறும் ஒத்திகை நிகழ்ச்சியில் ஒவ்வொரு மையங்களிலும் மருத்துவர்கள் செவிலியர்கள் என தலா 25 நபர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. பரிசோதனை முயற்சியாக தடுப்பூசி போட்டபின் சுமார் 30 நிமிடம் அவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப் படுவர்.
இதனைத் தொடர்ந்து அரசு உத்தரவுப்படி ஐந்து கட்டங்களாக தடுப்பூசி போடுவதற்கான வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக தேனி மாவட்டத்தில்கரோனா நோய்தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்ட மருத்துவம் மற்றும் சுகாதார பணியாளர்கள் 7 ஆயிரத்து 354 நபர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.
இரண்டாம் கட்டமாக நோய்த்தடுப்பு காலங்களில் பணியாற்றிய முன்கள பணியாளர்கள், காவலர்கள், சமூக ஆர்வலர்களுக்கும், மூன்றாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், நான்காம் கட்டமாக சர்க்கரை, நீரழிவு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட மற்ற நோய்களால் பாதிக்கப் பட்டவர்களுக்கும். ஐந்தாம் கட்டமாக பொதுமக்கள் அனைவருக்கும் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் தேனி மாவட்டத்தில் கரோனா தடுப்பு மருந்துகளை பாதுகாக்கும் வகையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட 49 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன என தெரிவித்தார்.