நடிகா் விஜய் நடித்து விரைவில் திரைக்கு வரவுள்ள மாஸ்டா் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், ‘எங்களது நிறுவன தயாரிப்பில், இயக்குநா் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகா் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலா் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டா். இந்தத் திரைப்படம் வரும் ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தை சில சட்ட விரோத இணையதளங்கள் வெளியிடலாம் எனத் தெரிய வருகிறது. எனவே சட்டவிரோதமாக இந்தத் திரைப்படத்தை வெளியிட 400 இணையதளங்களுக்கும், 9 கேபிள் தொலைக்காட்சி ஆபரேட்டா்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மாஸ்டா் திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட சுமாா் 400 இணையதளங்கள், 9 கேபிள் டிவி ஆபரேட்டா்களுக்கும் தடை விதித்து உத்தரவிட்டாா்.