சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்து உலகையே அச்சுற்றுத்தனும், அது அவர் ஒருவரால்தான் முடியும் என்று சென்னை வள்ளூவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட ரசிகர்களின் கோஷங்களாக இருந்தது.
ரஜினிகாந்தை அரசியலுக்கு வர வலியுறுத்தி சென்னை வள்ளூவர் கோட்டத்தில் ரஜினி ரசிகர்கள் காவல்துறையின் அனுமதியுடன் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 1 ணி வரை ஆன்மீக அரசியல் அழைப்பு விழா என்ற பெயரில் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
போராட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்கள் மற்றும் கர்நாடகம், கேரளம் மாநில ரசிகர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
'ஆன்மீக அரசியல் அழைப்பு விழா' என்ற பெயரில் நடைபெற்ற ரசிகர்களின் அறவழி போராட்டத்தில், 'ஆன்மீக அரசியலுக்கு வா தலைவா வா', 'வா தலைவா வா', 'மாத்துவோம் மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்', 'தலைவா தமிழகம் காக்க வா', 'எங்களை வாழ வைத்த தமிழகத்தை வாழவைக்கவா' 'தலைவா வா' போன்ற கோஷங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். ரஜினி உடல்நலம் சீராக வேண்டி மொட்டை போட்டுக்கொண்டும் ரசிகர்கள் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் ரஜினியின் திரைப்பட பாடலுக்கு உணர்ச்சி மிகுதியால் ரசிகர்கள் பலர் நடனமாடினர்.
சமூக வலைத்தளங்களில் #அரசியலுக்கு வாங்க ரஜினி என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.