நியாயவிலைக் கடைகளில் பனைப் பொருள்கள் விற்பனை செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்யும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாடார் சாதனையாளர் மற்றும் போராளிகளுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் சென்னையை அடுத்த மாங்காடு தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பனையிலிருந்து கல்கண்டு, வெல்லம் போன்ற பொருள்கள் தயாரிக்கிறார்கள்.
எங்கள் பகுதியில் இத்தொழிலில் பலர் ஈடுபட்டிருக்கிறார்கள். எனவே, இதன் மகத்துவம் எனக்கு நன்றாகத் தெரியும். அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பனை உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்வதற்கு அரசு பரிசீலிக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன் என்றார்.
அமைச்சர்கள் பாண்டியராஜன், கடம்பூர் ராஜு, பெஞ்சமின் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், முதல்வருக்கு செங்கோல் மற்றும் திருச்செந்தூர் வேல் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட நாள்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக விவசாயிகள் சங்கம் மற்றும் பனைத் தொழிலாளர் நல வாரியம் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.