அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியது..
மாற்றத்திற்கான சான்று அவிநாசியில் தெரிகிறது. இது தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நேர்மையாகக் கூடிய கூட்டம். இது கட்சிகளுக்கு உள்ளான போர் அல்ல. நேர்மைக்கும் ஊழலுக்கும் இடையே நடக்கும் போர். இதில், மக்கள் வாக்கு நேர்மையின் பக்கமே இருக்க வேண்டும். முதலை விழுங்கிய பாலகனை சுந்தரர் பாடல் பாடி மீட்டெடுத்த தலம் அவிநாசி.
தமிழகத்தை பண முதலைகளிடம் இருந்து மீட்டு எடுப்போம். அதற்காக மக்கள் உதவவேண்டும் வாக்களியுங்கள். புதிய வாக்காளர்கள் கரைபடியாதவர்கள். சாதியைப் பார்த்து வாக்களிக்காதீர், சாதிப்பவர்களுக்கு வாக்களியுங்கள். ஏழைகள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் என்பதற்காக ஆட்சியாளர்கள் 5 வருடத்திற்கு குத்தகைக்கு எடுக்கிறார்கள். அதற்காகவே வறுமைக்கோட்டுக்குக் கீழே வறுமைக்கோட்டுக்குக் கீழே என்று கூறுகிறார்கள்.
நாம் சொல்வதெல்லாம் செழுமை கோட்டிற்கு மேல் என்று தான் மக்களை அழைத்துச் செல்ல உள்ளோம். சாலைகள் குண்டும் குழியுமாக, திறந்த நிலையில் சாக்கடை. மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் மட்டும் மழை ஆனால் குடிநீருக்குப் பஞ்சம். நீர் மேலாண்மை செய்யக்கூடியவர்கள் பண வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள் எனவே தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் தமிழகத்தைச் சீரமைப்போம். நாளை நமதே.