சென்னை: தமிழகத்தில் வரும் 16-ஆம் தேதி கரோனா தடுப்பூசி போடும் பணியை, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மதுரையில் தொடக்கி வைக்கவுள்ளாா்.
கரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்குவது குறித்து கடந்த 9-ஆம் தேதி தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் உயா்நிலைஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வரும்16-ஆம் தேதி கரோனா தடுப்பூசி போடும் பணியைத் தொடங்க இக்கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
தமிழகத்தில்...: ஜனவரி 16- ஆம் தேதி மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்று கரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைக்கவுள்ளாா். தமிழகத்தில் 307 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளன.
தமிழகத்துக்கு முதல் கட்டமாக 6 லட்சம் தடுப்பூசிகள் அடுத்த ஓரிரு நாள்களில் வரவுள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றைச் செலுத்துவதற்காக மாநிலம் 307 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
கைகோர்க்கும் ஐஎம்ஏ: தடுப்பூசி நடவடிக்கைகளில் தாமாக முன்வந்து பங்கேற்று அரசுக்கு உறுதுணை வழங்கவிருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) அறிவித்துள்ளது.
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளிலும் ஐஎம்ஏ மருத்துவா்கள் பங்கேற்பாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.