நாகை மாவட்டம், வேதாரண்யத்திலிருந்து கடலுக்குள் சென்று சூறைக் காற்றுக்குள் சிக்கி அவதியுற்றுக் கரை திரும்புவது தாமதமானதால் தேடப்பட்டு வந்த மீனவர்கள் நால்வர் இன்று (ஜன.12) பகல் கரை திரும்பினர்.
ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயக்குமார், ஜெயமூர்த்தி, பவித்திரன், நவீன் ஆகியோர். மீனவர்களான இவர்கள் நால்வரும் கண்ணாடி இழைப்படகு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குள் சென்றுள்ளனர்.
திங்கள்கிழமை கரை திரும்ப வேண்டிய இவர்கள், திங்கள்கிழமை ஏற்பட்ட கனமழை, சூறைக்காற்றில் சிக்கி கடலுக்குள் அவதியுற்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் நால்வரும் தேடப்பட்டு வந்தனர். இந்த நிலையில், மீனவர்கள் நால்வரும் செவ்வாய்க்கிழமை பகலில் பத்திரமாகப் படகுடன் கரை சேர்ந்தனர்.
ஆறுகாட்டுத்துறைக்கு கரை திரும்பி மீனவர்களுடன் மீன்வளத்துறையினர்.