10 மாதங்களுக்குப் பிறகு சுருளி அருவியை திறக்க உத்தரவு; குளிக்கத் தடை நீட்டிப்பு
கம்பம்: தேனி மாவட்டத்தில் புகழ் பெற்ற சுருளி அருவியில் 10 மாதங்களுக்கு பிறகு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ளது புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சுருளி அருவி, இந்த அருவி மேகமலை வன உயிரின சரணாலயப் பகுதியில் உள்ளது.
கரோனா தொற்று பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கவில்லை, நுழைவாயிலும் அடைக்கப்பட்டது. ஆடி அமாவாசை, தை அமாவாசை தினங்களில் மட்டும் பக்தர்கள் முன் பகுதியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் தற்போது சுருளி அருவியை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுபற்றி வனத்துறை அலுவலர் ஒருவர் கூறும்போது கரோனா தொற்று பரவல் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பின்னர் சுருளி அருவியை திறக்க அரசு உத்தரவு அனுப்பியுள்ளது.
மேலும் சுருளி அருவி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு நிபந்தனைகளையும் விதித்துள்ளது. இதில் குறிப்பாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது, சுற்றுலா பயணிகள் அனுமதி பொங்கல் பண்டிகைக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.