அவிநாசியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் புதன்கிழமை வேளாண் சட்ட நகல் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு, சில மாதங்களுக்கு முன் புதிதாக வேளாண் திருத்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியது. இதனை கண்டித்தும், மசோதாவை வாபஸ் பெற வலியுறுத்தியும் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் 49 நாள்களுக்கும் மேலாக தலைநகர் தில்லியில் முகாமிட்டு பல்வேறு கட்டமாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகப் போகிப் பண்டிகையை திருநாளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் அவிநாசியில் வேளாண் சட்ட நகல் எரித்துக் கண்டன கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவிநாசி சேவூர் சாலையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி. முத்துச்சாமி, விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் எஸ். வெங்கடாசலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பழனிச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் இஷாக், ஒன்றியக் குழு உறுப்பினர் மோகன், செல்வராஜ், இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்குரைஞர் கோபாலகிருஷ்ணன், பொறுப்பாளர் மணி, மதிமுக சார்பில் சுப்பிரமணி, பாபு, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் லோகநாதன், ராஜ்குமார் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பழனிச்சாமி, பொன்னுச்சாமி, பால்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.