அஞ்சல் துறையில் தொடர்ந்து தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து மத்திய தபால் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திற்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், தபால்துறையில் பிப்ரவரி 14-ஆம் தேதியன்று நடைபெறவுள்ள கணக்காளர் தேர்வு ஆங்கிலம் அல்லது இந்தி மொழி வாயிலாக மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி உள்பட அனைத்து மாநில மொழிகளிலும் தபால்துறைத் தேர்வுகள் நடைபெறும் என்று நாடாளுமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது.
தற்போது அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளில், தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.
மாநிலங்களுக்கு அளித்த உறுதி மொழியை பாதுகாக்கும் வகையில், தமிழ் மொழி வாயிலாகவும் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.