கம்பம்: முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணை, முல்லையாறு, தேக்கடி ஏரி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணை பகுதிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம், 121.55 அடியாகவும், நீர் இருப்பு, 2,935, நீர்வரத்து 825 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 700 கன அடியாகவும் இருந்தது.
புதன்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம், 122.25 அடியாகவும், நீர் இருப்பு, 3,074, நீர்வரத்து விநாடிக்கு 2,315 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 700 கன அடியாகவும் இருந்தது.
தொடர்ந்து செவ்வாய் மற்றும் புதன் கிழமை குமுளி, தேக்கடி, பெரியார் அணை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் புதன்கிழமை நிலவரப்படி பெரியாறு அணைப் பகுதியில், 13.0 மில்லி மீட்டர் மழையும் தேக்கடி ஏரியில் 78.0 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.