சங்ககிரி: சேலம் மேற்கு மாவட்டம், சங்ககிரி ஒன்றிய திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடும் நிகழ்ச்சி சங்ககிரி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலம் மேற்கு மாவட்டச் செயலர் (பொறுப்பு) டி.எம்.செல்வகணபதி இவ்விழாவிற்கு தலைமை வகித்து ஒன்றிய அலுவலக வளாகத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து சமத்துவ பொங்கல்வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு அனைவருக்கும் தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்களை கூறினார்.
பின்னர் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல், கரும்பு, சுண்டல் ஆகியவைகளை வழங்கிப் பேசினார்.
சங்ககிரி ஒன்றியச் செயலர் (பொறுப்பு) கே.எம்.ராஜேஷ் முன்னிலை வகித்தார். முன்னாள் ஒன்றியச் செயலர் பி.தங்கமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.வரதராஜன், முன்னாள் பால்வளத்தலைவர் சின்னதம்பி, மாவட்ட இளைரணி அமைப்பாளர் மணிகண்டன், மேற்கு மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் எஸ்.கிறிஸ்டோபர், நகர செயலர் சுப்ரமணி, முன்னாள் நகரச் செயலர் முருகன், மகளிரணி நிர்வாகி சந்திராதேவி, உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.