உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தை திங்கள் முதல் நாளான இன்று அதிகாலை முதலே விவசாய பெருமக்கள் வீடுகளில் வண்ணத் தோரணங்களைக் கட்டி புதுப் பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானை வணங்கினர்.
இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் இந்த திருநாளில், ஏராளமான மக்கள் புதுப்பானையில் மஞ்சள் குங்குமமிட்டு பச்சரிசி பொங்கலிட்டு வழிபாடு செய்து வருகின்றனர்.
வீடுகளில் வண்ணக் கோலங்கள், வண்ணத் தோரணங்கள், கரும்பு உள்ளிட்டவை கொண்டு அலங்கரித்து புத்தாடை அணிந்து பொங்கல் திருநாளை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
பொங்கல் திருநாளையொட்டி அதிகாலை முதலே கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சந்தைகளில் பொங்கல் திருநாள் வியாபாரங்களும் களைகட்டியுள்ளன.
மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, பாரம்பரிய நடனம், வழுக்கு மரமேறுதல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.