புதுக்கோட்டை: நாடு முழுவதும் நாளை சனிக்கிழமை நடைபெறும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்குகின்றன; இதில் தமிழ்நாட்டில் 166 இடங்களில் தடுப்பூசி போடப்படுவதாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் பணிக்காக தயார் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாட்டை வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் கூறியது:
தமிழ்நாட்டில் 166 இடங்கள் கரோனா தடுப்பூசி போடுவதற்காக தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
10199 மருத்துவ முன்களப் பணியாளர்கள் அவர்களின் சுயவிருப்பத்தின் அடிப்படையில் ஒப்புதல் பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குத் தான் முதல்கட்டமாக தடுப்பூசி போடப்படுகிறது. இத்துடன் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரபல மருத்துவ - முக்கிய பிரமுகர்களும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.
மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுதா சேஷய்யன், அப்போலோ மருத்துவக் குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி, இந்திய மருத்துவக் கழகத்தின் அகில இந்தியத் தலைவர், மாநிலத் தலைவர் உள்பட மருத்துவப் பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.
மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழி செய்யுமானால்- அனுமதி கிடைக்குமானால் நானும் (அமைச்சர் விஜயபாஸ்கர்) போட்டுக்கொள்ளத் தயாராக உள்ளேன்.
மருந்து அளவு விவரம்
5 மில்லி லிட்டர் அளவுள்ள ஒரு வயல் அளவு மருந்தை 10 பேருக்கு அதாவது தலா 0.5 மிலி அளவுக்கு செலுத்துகிறோம்.
ஒரு முறை மட்டுமே பன்படுத்த முடியும் என்ற வகையில் தயார் செய்யப்பட்டுள்ள ஊசிகள் இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு போதுமான அளவுக்கு இருப்பும் வைக்கப்பட்டுள்ளன என்றார் விஜயபாஸ்கர்.