திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள பெரியபாளையம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக அந்த மூன்று மதத்தையும் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி பெரியபாளையம் காவல் நிலையம் முன்பு நடைபெற்றது.
இதில் காவலர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது. பெண் காவலர்களும், ஆண் காவலர்களும் உற்சாகமாக தமிழ் பாரம்பரிய உடையில் கலந்துகொண்டு தமிழர் திருநாளாம் பொங்கலை வெகுவிமரிசையாக கொண்டாடினர்.
நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி இந்து முஸ்லீம் கிறிஸ்தவர் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு இந்த பொங்கல் கொண்டாடப்பட்டதாக ஆய்வாளர் தெரிவித்தார்.
அதேபோல் வடமதுரை கிறிஸ்தவ ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் தமிழ் பாரம்பரிய பறையடித்து தமிழ் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்து கிறிஸ்தவ ஆலயம் முன்பு பொங்கல் வைத்து பொங்கல் திருநாளாம் தைத்திருநாள் பாடல்களை பாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.