பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து வெள்ளிக்கிழமை அதிகாலை தாய், மகள் உயிரிழந்தனர்.
பட்டுக்கோட்டை வட்டம், வீரக்குறிச்சி வடக்குத் தெருவில் குடும்பத்துடன் வசிப்பவர் விவசாயி அந்தோணிசாமி (43). பக்கத்திலுள்ள இவரது இடத்தில் போடப்பட்டுள்ள குடிசை வீட்டில் அந்தோணிசாமியின் சகோதரி மேரி (45), அவர் கணவர் விவசாயி வரப்பிரசாதம் (50), மகள்கள் உதயா (20), நிவேதா (18) வசித்து வந்தனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை தொடர் மழையால் ஊறிப்போயிருந்த மேரியின் தம்பி அந்தோணிசாமி வீட்டுச் சுவர் இடிந்து மேரி வீட்டுச் சுவற்றில் விழுந்துள்ளது. அடுத்த கணமே மேரி வீட்டுச் சுவரும் இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மேரி, 2-வது மகள் நிவேதா இருவரும் இடிபாட்டில் சிக்கி அதேயிடத்தில் உயிரிழந்தனர். நிவேதா தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு டிப்ளமோ மாணவி ஆவார்.
விபத்தில் லேசான காயமடைந்த மூத்த மகள் உதயா பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். வரப்பிரசாதம் காயமின்றி உயிர்தப்பினார்.
இதுகுறித்து வரப்பிரசாதம் அளித்த புகாரின்பேரில் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.