முல்லைப் பெரியாறு அணையில் கொட்டும் மழையிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
முல்லைப் பெரியாறு அணை பகுதியில் தற்போது தொடர் சாரல் மழை பெய்து வருகிறது.
பருவநிலையும் மிகவும் குளிர்ந்து கொடைக்கானல், ஊட்டியை மிஞ்சும் அளவிற்கு மேகமூட்டமாகவும், குளிராகவும் காணப்படுகிறது.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக 7 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட தேக்கடிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதி, கடந்த 2020, செப்.5-ல் வழங்கப்பட்டது.
அப்போது தேக்கடி ஏரியில் 2 படகுகள் மட்டுமே இயக்கப்பட்டது, பின்னர் நவ. 14-ல் மூன்று படகுகள் இயக்கப்பட்டது. அதன் பின்னர் நவம்பர் 18-இல் பழைய நடைமுறை உள்ளதுபோன்று நாளொன்றுக்கு 5 முறை என 7:30, 9 :30 , 11:15, மதியம் 1.30, மாலை 3:30 என 5 முறை படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
வெள்ளிக்கிழமை மாட்டுப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாரல் மழை பெய்தாலும் சுற்றுலா பயணிகள் தேக்கடியில் படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி கேரள மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர் ஒருவர் கூறும்போது, நாள் ஒன்றுக்கு 5 முறை படகுகள் இயக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து, தற்போது படகுகள் இயங்கி வருகிறது என்றார்.