மயிலாடுதுறை: மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் கோவிட்-19 தடுப்பூசி சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா சனிக்கிழமை தொடக்கி வைத்தார். முதல் தடுப்பூசி மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனை மருந்தாளுநருக்கு செலுத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பு ஊசி சிறப்பு முகாம் சனிக்கிழமை தொடங்கியது. அவ்வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் நடைபெற்ற கோவிட்-19 தடுப்பூசி சிறப்பு முகாமுக்கு, மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலர் ஆர்.ராஜசேகர் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர்கள் மருத்துவர்கள் அருண்பிரசாத், ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதாரத்துறை துணை இயக்குநர் (குடும்பநலம்) மகேந்திரன் வரவேற்றார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று முகாமைத் தொடக்கி வைத்தார்.
முதல் தடுப்பூசி அரசினர் மருத்துவமனை மருந்தாளுநர் எம்.செல்வக்குமார் என்பவருக்கு செலுத்தப்பட்டு, கண்காணிப்பு அறையில் அமரச்செய்து கண்காணிக்கப்பட்டார்.
தொடர்ந்து, செவிலியர் எம்.பாபா ரகுராமன், ஜெ.சோபியா, கே.கவிதா, எஸ்.சுசீலா ஆகிய முன்களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், மயிலாடுதுறை மருத்துவமனை கோவிட்-19 ஒருங்கிணைப்பாளர் வீரச்செல்வன் மற்றும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில், மருத்துவர் வீரசோழன் நன்றி தெரிவித்தார்.