முல்லைப்பெரியாறில் தண்ணீர் நிறுத்தம்: வைகையாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை எதிரொலி

தேனி மாவட்டம் வைகை ஆற்றில் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை எதிரொலியாக முல்லை பெரியாற்றில் தண்ணீர் சனிக்கிழமை நிறுத்தப்பட்டது.
முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணை

கம்பம்: தேனி மாவட்டம் வைகை ஆற்றில் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை எதிரொலியாக முல்லை பெரியாற்றில் தண்ணீர் சனிக்கிழமை நிறுத்தப்பட்டது.

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையில் சனிக்கிழமை மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது, இதன் எதிரொலியாக முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு தண்ணீர் வெளியேற்றும் அளவு, நிறுத்தப்பட்டு, 100 கன அடி தண்ணீர் மட்டும் வெளியேற்றப்படுகிறது. 

இதுகுறித்து பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர் கூறும்போது, வைகை அணை முழுக்கொள்ளவை (71 அடி) எட்டி வருகிறது, இதனால் வைகை ஆற்றில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது, இதனால் முல்லைப்பெரியாற்றிலிருந்து தமிழகப்பகுதிக்கு திறந்து விடப்படும் தண்ணீர் அளவு நிறுத்தப்பட்டு, வறட்சியாக காணப்படக்கூடாது என்பதற்காக, 100 கன அடி தண்ணீர் மட்டும் வெளியேற்றப்பட்டுள்ளது என்றார்.

மின்சார உற்பத்தி நிறுத்தம்: முல்லைப்பெரியாறு அணையிலிருந்து கடந்த சில நாள்களாக தமிழகப்பகுதிக்கு விநாடிக்கு, 767 கன அடி தண்ணீர் மட்டும் வெளியேற்றப்பட்டதால், லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார நிலையத்தில், நான்கு மின்னாக்கிகளில் 2 மட்டும் செயல்பட்டு, 69 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்றது. சனிக்கிழமை அணையிலிருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டதால், ஏற்கனவே செயல் பட்ட 2 மின்னாக்கிகளும் தண்ணீர் வரத்து இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. 

அணை நிலவரம்: சனிக்கிழமை நிலவரப்படி, நீர்மட்டம் 129.75 அடியாகவும், நீர் இருப்பு 4,643 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து 3,967 கன அடியாகவும், வெளியேற்றம் விநாடிக்கு, 100 கன அடியாகவும் இருந்தது. தேக்கடி ஏரியில் மட்டும் 3.0 மில்லி மீட்டர் மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com