திருச்சி : 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை என்று திருச்சி மாவட்ட கண்காணிப்பு குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் திருச்சி மாவட்ட கண்காணிப்பு குழு தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இன்று பள்ளி முழுவதும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கரோனா தாக்கத்தால் தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளது.
10 மற்றும் 12ம் வகுப்பு வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 10 மாதங்களுக்குப் பிறகு நாளை பள்ளிகள் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, மெட்ரிக் பள்ளி, சிபிஎஸ்இ பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 506 திறக்கப்பட உள்ளன.
இதற்காக பள்ளிகள் திறக்கப்பட்டு, சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மாணவர்களை வரவேற்கத் தயார் நிலையில் உள்ளன. ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே 6 அடி இடைவெளி விட்டு அமர வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு வழங்குவதற்காக சிங் மற்றும் விட்டமின் மாத்திரைகள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு மாணவருக்கு 10 சிங்க் 10 விட்டமின் மாத்திரைகள் என மொத்தம் இருபது மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்களின் உடல் வெப்ப நிலையை அறிய தெர்மல் ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. விடுதிகளிலும் உரிய சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் தடுப்பு வழிகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் பள்ளி திறந்த பின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் நிர்மல் ராஜ் தலைமையிலான வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் என 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவானது திருச்சியிலுள்ள பள்ளிகளில் இன்றும் நாளையும் ஆய்வு மேற்கொள்கின்றனர். திருச்சி மாவட்டத்தைப் பொருத்தவரை 506 பள்ளிகள் உள்ளன. அதில் 10 மற்றும் 12 ம் வகுப்பில் 75700 மாணவர்கள் பயில்கின்றனர்.
ஆய்வின்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிர்மல்ராஜ், மாணவர்கள் வருகை கட்டாயமில்லை, வருகைப் பதிவேடு முறை கிடையாது. விருப்பமுள்ள மாணவர்கள் தங்கள் பெற்றோரின் அனுமதி கடிதம் பெறப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என்றார். மாவட்ட ஆட்சியர் சு .சிவராசு உடனிருந்தார்