தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ ஆராதனை விழா பிப். 1, 2ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதை முன்னிட்டு தியாகராஜ ஆசிரமத்தில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஸ்ரீ தியாக பிரம்ம சபையின் அறங்காவலர் ஜி. சந்திரசேகர மூப்பனார் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
ஆண்டுதோறும் இவ்விழா 5 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக இவ்விழா இரு நாள்களுக்கு மட்டுமே நடைபெறுகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கும் இவ்விழா 2ஆம் தேதி நிறைவடைகிறது. இதில் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை பஞ்சரத்தின கீர்த்தனைகள் வைபவம் நடைபெறவுள்ளது.
மத்திய மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, இவ்விழாவில் 200 பேர் வரை அனுமதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் சந்திரசேகர மூப்பனார். அப்போது அறங்காவலர் எஸ். சுரேஷ் மூப்பனார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.