பள்ளிகள் நாளை திறப்பு: மாநிலம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
சென்னை: தமிழகத்தில் நாளை 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளையும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகிறார்கள்.
சென்னை ஷெனாய் நகரில் உள்ள திருவிக உயர்நிலைப் பள்ளியை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் நேரில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, கல்வி வளாகங்களை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் பயன்படுத்த கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளையும், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.
பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கவும், சமூக இடைவெளியை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக்கு வரும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.