புதுச்சேரி: புதுவை ஆளுநர் மாளிகை முன்பு முதல்வர் வே.நாராயணசாமி, சமூக நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி ஆகியோர் இன்று தரையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.
துணைநிலை ஆளுநரை, 15 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக சந்திக்க அனுமதி கோரி சட்டப்பேரவை வளாகத்தில் கடந்த 10 நாள்களாக சமூக நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த 10 நாள்களாக போராடியும் ஆளுநர் கிரண்பேடி கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் திடீரென ஆளுநர் மாளிகை முன்பு அமைச்சர் கந்தசாமி இன்று தர்ணாவில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக முதல்வர் நாராயணசாமியும் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் புதுவை மக்களவை உறுப்பினர் வெ.வைத்திலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, தீப்பாய்ந்தான் ஆகியோரும் உள்ளனர்.
ஆளுநர் மாளிகையை சுற்றி 13 நாள்களாக மூன்று அடுக்கு துணை ராணுவப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.