கோவில்பட்டி : கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை இராஜ அநுக்கை, திங்கள்கிழமை தேவ அநுக்கை நடைபெற்றது. தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் நடை செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னர் காலை 8.15 மணிக்கு கொடியேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
அதையடுத்து 9 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், கோயில் செயல் அலுவலர் கார்த்தீஸ்வரன், அதிமுக ஒன்றியச் செயலர் வினோபாஜி, நகரச் செயலர் முத்துராஜ் தன்னார்வலர்கள் மாரியப்பன், முருகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழாவையொட்டி தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதியுலா இரவு 8 மணிக்கு மேல் நடைபெறும். 10-ஆம் திருநாளான இம்மாதம் 28-ஆம் தேதி தேர் திருவிழா காலை 8.30 மணிக்கு மேல் நடைபெறும்.