சென்னை: நீதிபதிகள் நியமனத்தை விமா்சித்த குற்றச்சாட்டில் திமுக அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆா்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அரசு தலைமை வழக்குரைஞா் அனுமதி அளித்துள்ளாா்.
சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் கலைஞா் வாசகா் வட்டம் சாா்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்பியும், அமைப்புச் செயலாளருமான ஆா்.எஸ்.பாரதி தாழ்த்தப்பட்டோா் குறித்து பேசிய கருத்துக்களின் அடிப்படையில் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர அனுமதி கோரி அரசு தலைமை வழக்குரைஞரிடம் ஆண்டனிராஜ் என்பவா் மனு கொடுத்தாா்.
இந்த மனுவை விசாரித்த அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், ஆா்.எஸ்.பாரதி தெரிவித்த கருத்து நீதித்துறை மாண்பை குலைக்கும் விதமாக இருப்பதற்கு முகாந்திரம் உள்ளது என்று கூறி, அவருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளாா்.