திருப்பூர் மாவட்டத்தில் ஆட்சியர் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர்கள் பட்டியலில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 23 லட்சத்து 52 ஆயிரத்து 785 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் திருத்தம், பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பாக 4 சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
இதையடுத்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் புதன்கிழமை வெளியிட்டார். இதில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 11 லட்சத்து 63 ஆயிரத்து 767 ஆண் வாக்காளர்கள், 11 லட்சத்து 88 ஆயிரத்து 733 பெண் வாக்காளர்கள், இதர பிரிவைச் சேர்ந்தவர்கள் 285 என மொத்தம் 23 லட்சத்து 52 ஆயிரத்து 785 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த இறுதி வாக்காளர் பட்டியல்கள் மாநகராட்சி, சார் ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் என்று ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.