தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் பிப்ரவரி இறுதியில் வெளியிடலாம் என கேரள தலைமைத் தேர்தல் அலுவலர் டிக்காராம் மீனா தெரிவித்துள்ளார்.
கேரள பேரவைத் தேர்தலை ஏப்ரல் தொடக்கம் அல்லது ஏப்ரல் மத்தியில் நடத்த அந்த மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் மீனா தேர்தல் ஆணையத்திடம் பரிந்துரைத்துள்ளார்.
இதுபற்றி ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் மீனா கூறியது:
"ஏப்ரல் மத்தியில் தொடங்கி மே மாதம் வரை புனித ரம்ஜான் மாதம் நிகழவுள்ளதால் அதற்கு முன்பே தேர்தல் நடத்துவது உகந்ததாக இருக்கும். மேலும் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளும் மே 4-ம் தேதி தொடங்கவுள்ளதால், வாக்குப் பதிவு மையங்களாகப் பயன்படுத்தப்படும் பள்ளிகளின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும்.
கேரளம், தமிழகம், மேற்கு வங்கம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் பிப்ரவரி இறுதியில் வெளியிடலாம்" என்றார் அவர்.