நாமக்கல்: சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி, நாமக்கல்லில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவும், தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் பயன்கள் குறித்து பேரணி மூலம் விளக்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
32-ஆவது சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17-ஆம் தேதி வரை தமிழக அரசின் போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தற்போது மாவட்ட வாரியாக விழிப்புணர்வு பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இரு சக்கர வாகன பேரணியில் பங்கேற்ற காவல் துறையினர்.
அந்த வகையில் நாமக்கல்லில் மாவட்ட ஆட்சியர் கா. மெகராஜ் வியாழக்கிழமை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கப்பட்ட மகளிர் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியில், 300க்கும் மேற்பட்ட பெண்கள் தலைக்கவசம் அணிந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். நாமக்கல் பூங்கா சாலையில் இந்த பேரணி நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஏ. சுஜாதா, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் டாக்டர் ஆர். மணி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ரவிச்சந்திரன், முருகன், மாதேஸ்வரன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், மகளிர், காவல் துறையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.