பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநரிடம் தமிழக அரசு மீண்டும் கூடுதல் அழுத்தம் தர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டிய கண்டிப்பும், அதைத் தொடர்ந்து மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்த சில நாள்களில் நல்லது நடக்கும் என நம்புவோம். புதிய வாரம் புதிய நம்பிக்கை அளிக்கும்!
பேரறிவாளன் விடுதலை குறித்து அடுத்த 4 நாள்களில் ஆளுநர் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ள நிலையில், அந்த முடிவு நல்ல முடிவாக இருக்க வேண்டும் என்று தமிழக ஆளுநரிடம் தமிழக அரசு மீண்டும் கூடுதல் அழுத்தம் தர வேண்டும்!
பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து மீதமுள்ள 6 தமிழர்களையும் விடுதலை செய்ய ஆளுநர் ஆணையிட வேண்டும். இவை அனைத்தும் நடப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.