சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் விடுதி முன்பு தொடர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரியாக தமிழக அரசு அறிவித்து விட்டு தனியார் சுயநிதி கல்லூரிகளை விட கூடுதல் கல்விக் கட்டணம் வசூல் செய்வதை கண்டித்தும், அரசு மருத்துவக்கல்லூரி கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் கடந்த 43 வது நாளாக பல்வேறு வகையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கடந்த புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனையடுத்து ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மறுதேதி குறிப்பிடாமல் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் வியாழக்கிழமை மாலை 4 மணிக்குள் விடுதி மற்றும் கல்லூரி வளாகத்தை விட்டு மாணவர்கள் வெளியேற நிர்வாகம் உத்தரவிட்டது.
இதனையடுத்து மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் விடுதி முன்பு அமர்ந்து வியாழக்கிழமை மாலை முதல் தொடர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.