விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் மேலாண்மை குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் தாக்கிய 'நிவர்' புயல் காரணமாக பெய்த பலத்த மழையால், 1,626.6 ஹெக்டேர் அளவிலான பயிர்கள் சேதமடைந்தன. இதேபோல் 323.83 ஹெக்டேர் தோட்டப் பயிர்களும், 1,024 வீடுகள் சேதமடைந்தன.
இந்த பாதிப்புகளை ஏற்கனவே மத்திய குழுவினர் பார்வையிட்டு சென்றுள்ள நிலையில், இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை குழுவினர் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கண்டமங்கலம் அருகே கலிஞ்சுக்குப்பம், வீராணம் பகுதியில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட வாழைத்தோட்ட பயிர்கள், நெல் பயிர்கள், விழுப்புரம் தாமரைக் குளம் பகுதியில் வீடுகள் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டனர்.
இதனைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட புகைப்படங்களை பார்வையிட்டு, அனைத்துத் துறை அதிகாரிகளுடன் கணக்கெடுப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், திட்ட இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.