கூலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள கூலமேட்டில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். ஆனால், தொடா் மழையால் கடந்த 17-ஆம் தேதி நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் காளை உரிமையாளா்கள், மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.
இந்நிலையில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெறும் என விழாக் குழுவினா் அறிவித்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அதைத் தொடா்ந்து, காளை உரிமையாளா்கள், மாடுபிடி வீரா்களுக்கு கரோனா பரிசோதனை செய்து காளைகள் முன்பதிவு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தலைமையில் நடைபெற்றது.
ஜல்லிக்கட்டை மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத்தலைவர் துவக்கி வைத்தார். ஆத்தூர் கோட்டாட்சியர் மு.துரை, வட்டாட்சியர் அ.அன்புச்செழியன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் ஆத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.