விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் புதிதாகக் கட்டப்பட்ட தளவானூர் அணைக்கட்டின் கரை பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் அருகே தளவானூர் -எனதிரிமங்கலம் கிராமங்களுக்கு இடையே, தென்பெண்ணை ஆற்றில் கடந்த 2019-ம் ஆண்டில் ரூ.25 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது.
இதனையடுத்து கடந்தாண்டு அமைச்சர் சிவி சண்முகம் இந்த அணைக்கட்டை திறந்து வைத்தார்.
அணை கட்டிய பிறகு கடந்த மாதம் பெய்த தொடர் மழையின் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ள நீர் வழிந்தோடியது. இதனால் தளவானூர் அணைக்கட்டில் கடந்த ஒரு மாத காலமாக மழைநீர் வழிந்து ஓடியது.
கடந்த வாரத்தில் தென்பெண்ணை ஆற்றில் மழை வெள்ள நீர் நின்றபிறகு, தளவானூர் அணைக்கட்டில் பத்தடி உயர அளவிற்கு தண்ணீர் தேங்கி நின்றது. இந்த நிலையில் அணைக்கட்டின் எதிர்ப்புற கரைப்பகுதி எனதிரிமங்கலம் பகுதியில் கரைப்பகுதி சரியாக பலப்படுத்தாததால் சனிக்கிழமை பிற்பகலில் திடீரென நீர் கசிவு ஏற்பட்டு உள்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு அணைக்கட்டில் இருந்து தண்ணீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியது.
அணையின் கரை பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் நேரில் சென்று பார்வையிட்டனர்.
தகவலறிந்த பொதுப்பணித்துறையினர் அணைக்கட்டின் கரைப் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு அணை நீர் வெளியேறுவதை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய அணையில், அணைக்கட்டு கரைப்பகுதி சரியாக அமையாததால் உடைப்பு ஏற்பட்டு தேங்கிய தண்ணீர் அனைத்தும் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.