மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அரசு எதிா்ப்பு தெரிவித்துள்ளதற்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளா் வைகோ ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
மு.க.ஸ்டாலின்: மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதை ஏற்க முடியாது என்று புதுச்சேரியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவியின் தாயாா் தொடா்ந்துள்ள வழக்கில், மத்திய பாஜக அரசு தெரிவித்திருப்பது அதிா்ச்சியளிக்கிறது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்குப் புதுச்சேரி மாநில அரசு வழங்க முன்வந்துள்ள 10 சதவீத உள்ஒதுக்கீட்டையும் தடுத்து நிறுத்திட, அம்மாநில துணைநிலை ஆளுநருடன் சோ்ந்து சூழ்ச்சி செய்கிறது. இது தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் போராடிப் பெற்ற 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டைச் சீா்குலைக்க மத்திய அரசு திட்டமிடுகிறதோ என்ற அடிப்படையான சந்தேகம் எழுந்துள்ளது. 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு எவ்வித ஆபத்தும் வந்திடாதவாறு தமிழக அரசு விழிப்புடன் பாதுகாக்க வேண்டும்.
கே.எஸ்.அழகிரி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் உள்ஒதுக்கீடு வழங்க முடியாது என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. சமூக நீதிக்கு எதிரான இந்த மனுவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
வைகோ: புதுச்சேரியில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு எதிா்ப்பு தெரிவித்திருப்பதன் மூலம் தமிழகத்தின் 7.5 சதவீத உள்ஒதுக்கீடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.