நாடு முழுவதும் 50 இடங்களில் பிப். 1 முதல் மருத்துவர்கள் உண்ணாவிரதம்

கலப்பு மருத்துவத்தை மத்திய அரசுக் கைவிட வலியுறுத்தி நாடு முழுவதும் 50 இடங்களில் பிப். 1 ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது
முகாமில் பேசிய அகில இந்திய மருத்துவர் சங்கத் தலைவர் ஜெயலால்.
முகாமில் பேசிய அகில இந்திய மருத்துவர் சங்கத் தலைவர் ஜெயலால்.


தஞ்சாவூர்: கலப்பு மருத்துவத்தை மத்திய அரசுக் கைவிட வலியுறுத்தி நாடு முழுவதும் 50 இடங்களில் பிப். 1 ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது என்று அகில இந்திய மருத்துவர் சங்கத் தலைவர் ஜெயலால் கூறினார்.

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

மத்திய அரசு அனைத்து மருத்துவ முறைகளையும் ஒன்றிணைத்து கலப்பு மருத்துவ முறையைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் அலோபதி, ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதி என பல்வேறு மருத்துவ முறைகளில் தற்போது சிகிச்சை நடைபெறுகிறது. 

ஒவ்வொரு துறையும் தனித்தனிச் சிறப்பு வாய்ந்தது. இவை அனைத்தும் தனித்தனி வகையிலே பொதுமக்களுக்குத் தேவையான ஒன்று. ஆனால், இவற்றை ஒன்றோடு ஒன்று கலந்து சிகிச்சை அளிப்பது என்பது பொதுமக்களுக்கு ஆபத்தாகவும், பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவும் இருக்கும். 

அந்த அடிப்படையில் நாடு முழுவதும் இந்தக் கலப்பு மருத்துவத் திட்டத்தை மத்திய அரசுக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள், மருத்துவர்கள் சார்பாக பிப். 1 முதல் 14 ஆம் தேதி வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என இந்திய மருத்துவ சங்கம் அறிவித்திருக்கிறது.

மத்திய அரசு உடனடியாக இந்தக் கலப்பு மருத்துவத் திட்டத்தைக் கைவிடுகிறோம் என அறிவித்து தனித்தனி முறையில் பல்வேறு மருத்துவப் பிரிவுகளை வளர்ச்சி அடையச் செய்வதற்கும், பொதுமக்களுக்குப் பயன்படக்கூடிய வகையிலும் ஏற்பாடு செய்ய முன்வர வேண்டும். 

எனவே, பிப். 1 ஆம் தேதி முதல் 14 நாள்களுக்கு தேசிய அளவில் 50 இடங்களில் மருத்துவர்கள் 24 மணிநேரமும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்வர். தமிழகத்தில் இப்போராட்டம் 4 இடங்களில் நடைபெறும். இதில், மருத்துவர்களுடன் இணைந்து பல் மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் ஆகியோரும் இப்போராட்டத்தில் பங்கேற்பர்.

இப்போராட்டத்தின் மூலம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அரசு செவி சாய்க்காவிட்டால் கோரிக்கை நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும்.

இப்போராட்டத்தின்போது பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்த வேண்டும் என்பது நோக்கமல்ல. எனவே, நாங்கள் மருத்துவமனையை மூடவில்லை. மருத்துவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு எங்களது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக அகிம்சை வழியில் இப்போராட்டத்தைத் தேர்ந்தெடுத்துள்ளோம் என்றார் ஜெயலால்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com