2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக கூட்டணி அமைக்கும் கட்சிதான் வெற்றி வாகை சூடும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேமுதிக ஒன்றியச் செயலாளர் ஒய்.எஸ்.டி. சமுத்திரபாண்டி மகன் விக்னேஷ் திருமணத்தை நடத்தி வைக்க வருகை தந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனையில் இருந்து திறந்தவெளி வாகனத்தில் பொதுமக்களுக்கு கையசைத்து வந்து உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
பின்னர் தேமுதிக உசிலம்பட்டி ஒன்றியச் செயலாளர் ஒய்.எஸ்.டி. சமுத்திர பாண்டி மகன் திருமணத்திற்குச் சென்று மணமக்களுக்கு தங்க மோதிரங்கள் பரிசாக வழங்கினார். அதனை மணமக்கள் ஒருவருக்கொருவர் மாற்றி அணிவிக்கச் செய்து மணமக்களை ஆசீர்வதித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக கூட்டணி அமைக்கும் கட்சிதான் வெற்றி வாகை சூடும், ஆட்சி அமைக்கும். கிளைமாக்ஸில் மட்டும் கேப்டன் பிரச்சாரத்திற்கு வருவார். தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பின்னர் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும்.
சசிகலா விடுதலையை வரவேற்கிறேன். அவருக்கு உடல்நலக் குறைவு என்பது ஒரு பெண் என்கின்ற முறையில் எனக்கு வருத்தம், அவர் உடல் நலம் பெற்று மீண்டும் வரவேண்டும். அவர் விடுதலையாகி வரும்போது அவரை ஏற்றுக் கொள்வது அதிமுகவின் நிலைப்பாடு. ஒரு பெண்ணாக ஒரு பெண்ணுக்கு எப்போதும் என்னுடைய ஆதரவு இருக்கும்.
தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுப்பதில் அதிமுக காலதாமதப்படுத்தி வருகிறது. விரைவில் நல்ல முடிவை எடுப்பார்கள் என்றார்.
இதில் மாவட்டச் செயலாளர் கணபதி, நகரச் செயலாளர் அசோகன், விவசாய அணி கருமாத்தூர் பாண்டி, சேடபட்டி முருகன், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.