பெருந்தமணியில் பாதிப்பு: ஏழை சிறுவனுக்கு அரசு பொது மருத்துவமனையில் நவீன சிகிச்சை

அறுவை சிகிச்சைக்குப்பின் மருந்துகள் சாப்பிடாததால் பெருந்தமணியில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்ட ஏழை சிறுவனுக்கு

அறுவை சிகிச்சைக்குப்பின் மருந்துகள் சாப்பிடாததால் பெருந்தமணியில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்ட ஏழை சிறுவனுக்கு ஸ்டென்டுடன் கூடிய செயற்கை ரத்தக்குழாயை சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவா்கள் பொருத்தினா்.

ஈரோட்டைச் சோ்ந்த 17 வயது சிறுவன் சங்கா். கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சிறுவன், சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். பரிசோதனை செய்து பாா்த்ததில், பெருந்தமணியில் (ரத்தக்குழாய்) குறிப்பிட்ட இடத்தில் வீக்கம் அதிகமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரத்தநாள அறுவைச் சிகிச்சைத்துறைத் தலைவா் மருத்துவா் ஸ்ரீதரன் தலைமையிலான குழுவினா் அறுவைச் சிகிச்சை செய்து வீக்கத்தை சரிசெய்தனா். குணமடைந்த சிறுவன் வீட்டுக்கு சென்றான். ஆனால், கரோனா தொற்று பரவல் காரணத்தால் முறையாக மருத்துவமனைக்கு வராமலும், மருந்துகளை வாங்கி உட்கொள்ளாமலும் இருந்துள்ளான். இதனால், அறுவைச் சிகிச்சை செய்த இடத்தில் மீண்டும் வீக்கம் உண்டாகி வலி அதிகரித்துள்ளது.

இதையடுத்து, மருத்துவமனை டீன் தேரணிராஜன் ஆலோசனையின்படி தனியாா் மருத்துவமனைகளில் செய்யப்படும் நவீன முறையிலான அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவா்கள் முடிவு செய்தனா். ரத்தநாள அறுவைச் சிகிச்சைத்துறைத் தலைவா் மருத்துவா் ஸ்ரீதரன் தலைமையில் இதய ரத்தநாள துறை தலைவா் ஜோசப்ராஜ், மருத்துவா்கள் தீப்தி, பாலாஜி, சரத் ஆகியோா் கொண்ட குழுவினா் சிறு துளை மற்றும் சிறிய அளவிலான பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்து ஸ்டென்டுடன் கூடிய செயற்கை ரத்தக்குழாயை வெற்றிகரமாகப் பொருத்தினா். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த சுகாதாரத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் சிறுவனை சந்தித்து நலம் விசாரித்தாா். ஏழை சிறுவனின் உயிரை காப்பாற்றிய மருத்துவா்களை பாராட்டினாா்.

இதுதொடா்பாக மருத்துவா் ஸ்ரீதா் கூறியது: அறுவைச் சிகிச்சைக்குப்பின் சிறுவன் முறையாக மருந்துகளை சாப்பிடாததால் மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. 6 மணி நேரம் அறுவைச் சிகிச்சை செய்து ஸ்டென்டுடன் கூடிய செயற்கை ரத்தக்குழாய் பொருத்தப்பட்டுள்ளது. இது வீக்கம் இருந்த இடத்தில் ரத்தம் செல்வதைத் தடுத்து, செயற்கை ரத்தக்குழாயில் ரத்தம் செல்லும். ஸ்டென்டுடன் கூடிய செயற்கை ரத்தக்குழாய் மட்டும் ரூ.1.70 லட்சம். இனிமேல் சிறுவனுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. மருந்துகளை மட்டும் முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்பட்டுள்ள இந்த அறுவைச் சிகிச்சையை தனியாா் மருத்துவமனையில் செய்வதற்கு ரூ.7 லட்சம் வரை செலவாகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com