அரசு மருத்துவா்களுக்கான கலந்தாய்வை மீண்டும் நடத்தக் கோரிய வழக்கு: மருத்துவ கல்வி இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

அரசு மருத்துவா்களுக்கான கலந்தாய்வை மீண்டும் நடத்தக் கோரிய வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் மருத்துவக் கல்வி இயக்குநா் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

அரசு மருத்துவா்களுக்கான கலந்தாய்வை மீண்டும் நடத்தக் கோரிய வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் மருத்துவக் கல்வி இயக்குநா் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தேனி மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியா் தங்கராஜ் என்பவா் தாக்கல் செய்த மனுவில், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவா்களுக்கான பணிமாற்றம் மற்றும் பதவி உயா்வு கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் காது, மூக்கு, தொண்டை மருத்துவா்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வை மீண்டும் நடத்த வேண்டும். மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் பற்றிய விவரங்களை வெளிப்படையாக அறிவிக்காமல் கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. காது, மூக்கு, தொண்டைப் பிரிவில் சென்னை, செங்கல்பட்டு, மதுரை, கன்னியாகுமரி உள்பட 9 மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் பேராசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் 5 கல்லூரிகளில் அந்தப் பிரிவைச் சோ்ந்த மருத்துவா்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளது தெரியவந்துள்ளது. 14 கல்லூரிகளில் காலிப் பணியிடங்கள் இருந்தும், 9 கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருப்பது தன்னிச்சையானது என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனு தொடா்பாக திங்கள்கிழமை (ஜன.25) பதிலளிக்க மருத்துவக் கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com