கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் குடியரசு நாள் விழாவில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.35,74,434 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திராபானு ரெட்டி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து தோட்டக்கலைத் துறை, தாட்கோ, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை உள்ளிட்ட 6 துறைகளைச் சேர்ந்த 25 பயனாளிகளுக்கு ரூ.35,74,434 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 119 அரசு ஊழியர்கள், காவல்துறை சார்பில் 48 காவலர்கள், சத்துணவு பணியாளர்கள் என மொத்தம் 169 பேருக்கு பதக்கங்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஸ் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.