விழுப்புரம்: நாட்டின் 72ஆவது குடியரசு நாள் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் குடியரசு நாள் விழா செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் மைதானத்தில் காலை 8.05 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தேசியக் கொடி ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் வண்ண பலூன்களையும், சமாதானப் புறாக்களையும் பறக்க விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு நடைபெற்றது.
தொடர்ந்து காவல்துறையை சேர்ந்த தலைமை காவலர்கள் 67 பேருக்கு முதலமைச்சரின் குடியரசு தின பதக்கங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இதனையடுத்து அனைத்து துறையைச் சார்ந்த சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். விழாவில் 152 பயனாளிகளுக்கு 70 லட்சத்து 47 ஆயிரத்து 85 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
எளிமையாக நடைபெற்ற விழாவில் டிஐஜி எழிலரசன், காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பிசிங், திட்ட இயக்குனர் மகேந்திரன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.