நாமக்கல் மாவட்டம்,பரமத்தி வேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் பால் வியாபாரி உள்பட இரண்டு இளைஞர்கள் பலியானது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சந்துரு ஆகிய இருவரும் நள்ளிரவு பிரபுவுக்கு சொந்தமான காரில் மொடக்குறிச்சியில் இருந்து பால் எடுத்துக்கொண்டு பரமத்தி வேலூர் நோக்கி வந்துள்ளனர்.
கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தனர். பரமத்தி பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே வந்த போது கார் எதிர்பாராதவிதமாக கார் கவிழ்ந்துள்ளதாக தெரிகிறது. இதில் காரில் இருந்த சந்துரு படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். காரை ஓட்டி வந்த பிரபு படுகாயங்களுடன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு உயிரிழந்தார். விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.