கோவில்பட்டி: கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூர்த்தி கோவிலில் தைப்பூசத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி இம்மாதம் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றன.
தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. 10 ஆம் திருநாளான வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் தேரோட்டம்.
தொடர்ந்து, திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னர், சுவாமி தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி காலை 7.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் நடைபெற்றது. பின்னர் காலை 9 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.
தேரோட்டத்தில், கழுகுமலை பேரூராட்சி முன்னாள் தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சந்திரசேகர், கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோ ரதத்தில் விநாயகப்பெருமான் முன் செல்ல, சட்ட ரதத்தில் உற்சவர் மூர்த்தியுடன் வள்ளி, தெய்வானை தேரில் தெற்கு ரத வீதி, பஸ் நிலைய சாலை, கோயில் மேலவாசல் தெரு, அரண்மனை வாசல் தெரு, கீழபஜார் வழியாக தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு இந்திர வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெறும்.