திருநெல்வேலி: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, திருநெல்வேலியில் உள்ள முருகன் கோவில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் விரதம் இருந்து, காவடி எடுத்தும், அலகு குத்தியும் முருகன் கோவிலுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். இதையடுத்து நிகழாண்டு, திருநெல்வேலியில் உள்ள முருகன் கோவில்களில் வியாழக்கிழமை காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
குறுக்குத்துறை திருக்கயிலாயபரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூசவிழாவையொட்டி காலையில் சிறப்பு ஹோமம், இதன் பின்பு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
இதேப்போன்று நெல்லையப்பர் கோவிலில் உள்ள ஆறுமுகர் சன்னதியில், சிறப்பு ஹோமம், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
மேலும், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள சாலைகுமரன் கோயில், வண்ணார்பேட்டை குட்டத்துறை முருகன் கோவில், சாலை சுப்பிரமணியர் கோவில், பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் சிவன் கோவிலில் உள்ள சுப்பிரமணியர் சன்னதி, பாளையங்கோட்டை மேலவாசல் சுப்பிரமணியர் கோவில், மேலப்பாளையம் சொக்கநாதர் கோவிலில் உள்ள சுப்பிரமணியர் சன்னதி உள்ளிட்ட கோவில்களில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நிகழாண்டு தைப்பூசத் திருவிழாவுக்கு அரசு விடுமுறை அறிவித்த காரணத்தால் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.