நாமக்கல்: வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி நாமக்கல் பூங்கா சாலையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் வடிவேல் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச் செயலாளர்கள் பொன். ரமேஷ், தினேஷ் பாண்டியன், கிழக்கு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், நாமக்கல் கிழக்கு, மேற்கு ஒருங்கிணைந்த மாவட்டத்தின் பாமக நிர்வாகிகள், தொண்டர்கள், வன்னியர்கள் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டு தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.
முன்னதாக நாமக்கல் பலபட்டரை மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்த அவர்கள், பூங்கா சாலை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுவிட்டு பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களுடைய கோரிக்கை மனுவை வழங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.