கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசிகளை பயன்படுத்த தடை கோரிய வழக்கு: உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி

மனுதாரர் விரும்பாவிட்டால் தடுப்பூசி போடாமல் இருந்து கொள்ளட்டும் பொதுவாக தடை கூறுவதை ஏற்க முடியாது என எச்சரிக்கை செய்தது. 

மதுரை: கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசிகளை பயன்படுத்த தடை கோரிய வழக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, மனுதாரர் விரும்பாவிட்டால் தடுப்பூசி போடாமல் இருந்து கொள்ளட்டும் பொதுவாக தடை கூறுவதை ஏற்க முடியாது என எச்சரிக்கை செய்தது. 

ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," கடந்த 3 ஆம் தேதி கரோனா தடுப்பூசிகளின், கட்டுப்பாடுடன் கூடிய அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளித்தது. இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு எனும் பெயரிலும் பாரத்பயோடெக் நிறுவனம் கோவாக்ஸின் எனும் பெயரிலும் தடுப்பூசிகளை விற்பனை செய்ய உள்ளது. தடுப்பூசிகள் தொடர்பாக நடைபெற்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனையின், இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் அவசர அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

ஒருபுறம் சோதனை நடைபெறும் சூழலில் மறுபுறம் அவசர நிலையை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவை பொருத்தவரை 1600 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது மிகவும் குறைவான அளவு. கடந்த 4 ஆம் தேதி தமிழக சுகாதாரத்துறை செயலர் வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழகத்தில் முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என 6 லட்சம் முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மத்தியபிரதேசத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட தீபக் உயிரிழந்த நிலையில், பொதுமக்கள் தடுப்பூசி தொடர்பான அச்சத்திலேயே உள்ளனர். 

இது தொடர்பாக நடவடிக்கைக் கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, மற்றும் பாரத்பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் ஆகிய தடுப்பூசிகளை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும். மேலும் இந்தத் தடுப்பூசிகளால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது  இதுபோன்ற கரோனா அவசரகால சூழ் நிலையில் இதுபோன்ற பொதுநல மனுக்கள் ஏற்புடையது அல்ல.

மனுதாரர் விரும்பாவிட்டால் தடுப்பூசி போடாமல் இருந்து கொள்ளலாம். அதைவிட்டு மொத்தமாக தடுப்பூசிக்கு தடை கூறுவதை எவ்வாறு ஏற்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து மனுதாரர் தனது மனுவை திருப்பப் பெற்றுக்கொள்வதாக கூறினார். இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com